வியாபம் முறைக்கேடு: வெளிவரும் சங்கப் பரிவாரங்களின் கூட்டுக் கொள்ளைகள்.

வியாபம் இந்திய அரசியல் வரலாற்றிலேயே நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய முறைகேடு என்று சொல்லலாம். அல்லது வசமாக சிக்கிக் கொண்ட ஒரு களவுத் திட்டம் என்று கூட சொல்லலாம். இதில் சம்பந்தப்பட்டவர்களும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் தினந்தோறும் புதுசு புதுசா பலரது கதைகளை தீர்த்துக் கட்டிக் கொண்டே வருகின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது. ஒருநாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர், மறுநாளோ கல்லூரியின் நிர்வாக முதல்வர் என 48 பேர் இதுவரை இறந்து போயுள்ளனர். அவர்களில் 23 பேரது மரணம் மர்மமான முறையில் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால் கூண்டிலிடப்பட்ட கூண்டுக்கிளியைப் போல சிபிஐ உச்சநீதிமன்றத்தின் ஆணையை மட்டும் வைத்துக் கொண்டு, இந்த வியாபம் முறைகேட்டினை எங்கோ ஒரு மூலையில் கிளறிக் கொண்டிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நேரடிப் பார்வையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி புரியும் ஒரு மாநிலத்தில் சிபிஐ-யால் எவ்வளவு ஆழத்திற்குத் தான் இந்த வழக்கைக் கிளற முடியும் என்பது தான் நமக்கு எழுகின்ற மிகப் பெரிய கேள்வியே.

இந்த முறைகேட்டிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்குமான தொடர்பு 1990-களில் அந்த இயக்கத்தால் நடத்தப்பட்டும் வரும் சரஸ்வதி சிசு மந்திர் என்ற கல்வி நிறுவனத்தில் சுதிர் சர்மா தனது ஆசிரியப் பணியைத் தொடங்கியதில் இருந்து தொடங்குகின்றது. அவரது தந்தை பாபுலால் சர்மா, கூட்டுறவு பால் பண்ணையில் கணக்கராக இருந்தவர், அன்றாட பிழைப்புக்கு சாயந்தர வேளைகளில் பால் விற்று காலத்தை ஓட்டி வந்தார். ஆனால், இன்று சர்மாவின் மொத்த சொத்து எவ்வளவு தெரியுமா? 20, 000 கோடி ரூபாய்கள். அவரது சாம்ராஜ்யம் சுரங்கத் தொழில், கல்வித் தொழில், ஊடகத் தொழில் எனப் பரந்து விரிந்திருக்கின்றது. கடந்த 2003-ஆம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் தனது வேலையைத் துறந்து விட்டு, அப்போதைய சுரங்கத்துறை மற்றும் கல்வித் துறை அமைச்சராக இருந்த லட்சுமிகாந்த் சர்மாவின் சிறப்பு கவனிப்பதிகாரியாக பணியாற்றத் தொடங்கியதிலிருந்து அவரது அசுர வளர்ச்சி தொடங்கியது.

சுதிர் சர்மா கைநிறைய காசு பார்க்கத் தொடங்கிய போது, மூத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களை அவர் கவனிக்கத் தவறியதில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கின்றது. சொல்லப் போனால், ஒரு கட்டத்தில் இந்தக் கொடுக்கல் வாங்கல்களில் புழங்கும் பணத்தின் தொகைகள் பெருகியது, அதனால் உதவியாளர்களும் யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கப்படுகின்றது, ஏன் கொடுக்கப்படுகின்றது என்பதற்கான தனிக் குறிப்புக்களை அவர்கள் வைத்திருந்தனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களான சுரேஷ் சோனி, பிரபாத் ஜா, பா.ஜ.க பாராளமன்ற உறுப்பினர் அனில் தேவ முதலியோரது பெயர்கள் அந்தக் குறிப்பிலிருந்தது தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லை சர்மாவின் ரயில், விமானச் செலவுகள் முதற்கொண்டு, தங்குமிடம் உட்பட அனைத்துச் இத்தியதி செலவுகளையும் சுதிர் சர்மா கவனித்து வந்திருக்கின்றார்.

சுதிர் சர்மாவிற்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார் முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் மிஷ்ரா. மாண்புமிகு அமைச்சரே சோனிக்கும் ஆசானாக விளங்கியிருக்கின்றார். வியாபம் முறைக்கேட்டு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட இருவர் தந்த வாக்குமூலத்தில் சோனியின் பெயர் வெளிவந்திருக்கின்றது.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர், கே.எஸ். சுதர்சனிடமிருந்தும், சோனியிடமிருந்தும் பரிந்துரைக் கடிதங்களை மிகிர் குமார பெற்றதாகச் சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் முன்னாள் அமைச்சர் லட்சுமிகாந்த் மிஷ்ராவின் சிறப்பு அதிகாரி ஒ.பி.சுக்லா வாக்குமூலம் தந்திருக்கின்றார்.

"சுதர்சன்ஜி அவர்கள் (லட்சுமிகாந்த்) சர்மாவிற்குப் போன் பண்ணி, எல்லாம் நல்ல படியாக முடிந்துவிடும் எனச் சொன்னார். அப்புறம் சுதர்சன் என்னிடம் விடத்தாள்களை தந்து தெரிந்த விடைகளை எழுதச் சொன்னார், தெரியாதவற்றை வெற்றிடமாக விட்டுவிடுமாறும் என்னிடம் சொன்னார்." என மிகிர் குமார தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.

வியாபம் முறைகேட்டில் அவர்களது பெயர்கள் அடிபடத் தொடங்கியதும், "இது வெறும் திட்டமிட்ட அரசியல் சதி" என நாக்பூரிலிருந்து அறிக்கை விட்டார் சோனி. சங்கதி கசிந்ததும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையோ, தகவல்களையோ குறிப்பிடாமல் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் வியாபம் ஊழலிற்கும் எவ்வித தொடர்புமில்லை என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல பத்திரிக்கையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.

ஆனால் முதல்வருக்கும், அவரது மனைவிக்கும் இம்முறைகேட்டில் உள்ள தொடர்புகளை திசைதிருப்பவே தமது இயக்கத்தின் பெயரை வேண்டும் என்று இழுத்துவிட்டிருக்கின்றார் என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஒரு பிரிவினர் குற்றம்சாட்டுகின்றனர். " முதல்வருடைய பெயரும், அவருடைய மனைவி சாதனா சுங்கின் பெயரும் திடிரென ஊடகங்களில் இருந்து மறைந்து போனது தற்செயலாக நடந்த ஒன்றில்லை " என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் ஒருவர் அடித்துக் கூறுகின்றார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்வரது மனைவிக்கு இம் முறைகேட்டில் தொடர்பிருப்பதாக முதல் குண்டை தூக்கிப் போட்டார் திக்விஜய் சிங். இதனைத் தொடர்ந்து சாதனா சுங்கின் தொலைப்பேசி அழைப்புக்களை விசாரிக்க வேண்டும் எனவும், அவர் பலமுறை வியாபம் நுழைவுத் தேர்வு அதிகாரிகளுக்குப் போன் போட்டுப் பேசியிருக்கின்றார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் முதல்வரது மனைவியின் சொந்த ஊரான கோண்டியாவைச் சேர்ந்த 19 பேர் போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தனர். வியாபம் முறைகேடு மூலமாகவே அவர்கள் நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதனையடுத்து வியாபம் நுழைவுத் தேர்வத் துறை கட்டுப்பாட்டு அலுவலகராக இருந்த பங்கஜ திரிவேதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த இரு தலைவர்களுக்கு இம் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவருமான சத்தியதேவ் கட்டாரேயும் அதில் உண்மையிருக்கக் கூடும் என்ற தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். " இது அவர்களுடைய கனவுத் திட்டமாகத் தான் இருந்திருக்கின்றது. மத்திய பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்களை வளர்த்தெடுத்து பயிற்சிக் கொடுத்து எங்கும் ஊடுருவச் செய்வதே அவர்களின் முக்கிய குறிக்கோளாய் இருந்திருக்கின்றது " எனக் கட்டாரே மேலும் குற்றம்சாட்டுகின்றார்.

இது அத்தோடு நின்றதா, சிறப்பு விசாரணைக் குழுவினர் தம் பங்கிற்கு எண்ணற்ற மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் ஏறக்குறைய 1,900-க்கும் அதிகமான நபர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றது. இதில் நிறையப் பேர் மாணவர்களே. இவர்களில் பலர் மீது முறைப்படியாக எவ்வித குற்றப்பத்திரிக்கையும் கூடத் தாக்கல் செய்யப் படவுமில்லை, பலர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படவுமில்லை. சிறப்பு விசாரணைக் குழுவினரது பயங்கரவாத போக்கை கண்டு மக்கள் கடும் பீதிக்குள்ளாகியிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். கைதானவர்களைக் குற்றவாளிகளாக கருதாமல், எதிர்தரப்பு சாட்சியங்களாகக் கருதுவது தான் முறை என மாணவர்களுக்காக வாதாடி வரும் சட்ட வல்லுநர்கள் குழு தெரிவிக்கின்றது.

மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் அதிர்ச்சியடைந்து, பயந்தும் போயுள்ளனர். "இளைஞர்கள் பலரும் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். பல மாணவர்கள் தம் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் அஞ்சி முடங்கிக் கிடக்கின்றனர்" எனத் தெரிவிக்கின்றார் கட்டாரே. 48 நபர்கள் மர்மமான முறையில் இறந்து போயுள்ள செய்திகள் ஊடகங்களில் வந்தவண்ணமிருப்பதால் மக்கள் மத்தியில் பீதி குறையவில்லை.

11 மாதங்கள் சிறையிலிருந்து விட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதால் பயத்துடனே வாழ்வதாகத் தெரிவித்திருக்கின்றார். " நான் வெளியே எங்கும் போறதில்ல, ஆபிசுக்கு கூட போறதில்ல. சிறையில், முன்பின் தெரியாத யார்யாரோ எல்லாம் வந்து நீதிமன்றத்திலோ, காவல்துறையிடமோ வாயைத் திறந்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என மிரட்டிவிட்டுப் போனார்கள் " என அவர் அவுட்லுக் இதழிற்குக் கூறியிருந்தார்.

இந்த வியாபம் முறைகேட்டின் முக்கிய மூளையாகச் செயல்பட்டவரும், வியாபம் நுழைவுத் தேர்வின் கணினி முறைமை பகுப்பாய்வாளருமான நிதின் மகேந்திராவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட தொடர் தொலைப்பேசி மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக இந்த முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பெயர் குறிப்பிட விரும்பாத மற்றுமொரு நபர் தெரிவிக்கின்றார். "காவல்துறை அதிகாரிகளோ குற்றம்சாட்டப் பட்டவர்களிடமிருந்து பணம் கறப்பதற்காக அடித்தும், துன்புறுத்தியும், அவமானப்படுத்தியும், மிரட்டியும் வருகின்றனர். அவங்களுக்கு இப்போ பணம் கறப்பது தான் முக்கியமாக இருக்கின்றது" என அந்நபர் மேலும் தெரிவிக்கின்றார். "சிறைக்குள்ளும் சரி வெளியிலும் சரி எங்களுக்கு எங்கேயும் பாதுகாப்பே இல்லை" என்கிறார் அவர். 

***

சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறக்கும் சுதிர் சர்மா ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு அளித்த பண விவரங்கள், வருமான வரித்துறையால் சேகரிக்கப்பட்ட அறிக்கையிலிருந்து பெறப்பட்டவை.




இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து தப்ப வைக்கவும், சிறையிலிருந்து விடுவிக்கவும் சிறப்பு விசாரணைக் குழுவினர் பலரிடமும் மிரட்டி பணம் பறித்து வருகின்றனர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவல்களில் உண்மை இருக்கத் தான் செய்கின்றன என்பதை இதில் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் அறிய முடிகின்றது. விஜய திருப்பாதி என்பவர் வியாபம் முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், இதற்காக அவர் ஆறு மாதங்கள் சிறையிலும் இருந்திருக்கின்றார். கடந்த ஏப்ரல் 14, 2015 அன்று நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியே வந்தார். ஆனால் வெளியே வந்து ஒரு சில நாட்களில், அதாவது ஏப்ரல் 25 அன்று சிறப்பு விசாரணைக் குழுவினரால் வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார். வியாபம் அதிகாரிகள் பலரது கைதைத் தொடர்ந்து, மேலும் பல இடைத்தரகர்கள், ஆள்மாறாட்ட தேர்வர்கள், தேர்வு கண்காணிப்பாளர்கள், மதிப்பெண் வழங்குநர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர், அவ்வளவு ஏன் பல மாணவர்களும் கைதாகியிருக்கின்றனர். மாணவர்கள் பலரும் தற்போது முன் பிணைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சிறையிலிருக்கும் பலருக்கும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட பலரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையுமின்றி, பிணையில் விடுவிக்கப்படாமலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவருக்கு அவருடைய மகனின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் தற்காலிக பிணை கேட்டும் கூட வழங்கப்படவில்லை. சிறப்பு விசாரணைக் குழுவினரால் குற்றம்சாட்டப்பட்டவர்களது பட்டியல் சம்பந்தமேயில்லாமல் நீண்டு கொண்டே போகின்றது. பல மருத்துவக் கல்லூரி மாணவர்களும் கூட சிறையிலிருக்கின்றனர். அவர்களைச் சிறையில் வைத்திருப்பதை விட விசாரணையின் தீர்ப்பு வரும் விசாரணைகளின் போது மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், மீறினால் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படலாம் என்ற நிபந்தனையோடு வரை கல்வியைத் தொடர அனுமதிக்கலாமே என வழக்கறிஞர்களும், காவல்துறை அதிகாரிகளும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

போபால் நகரை வலம் வந்து கொண்டிருக்கும் சில குறந்தகவல்கள் வியாபம் முறைகேட்டில் எந்தளவுக்குப் பணமும், பல நபர்களும் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்பதைத் தெளிவாக்குகின்றது. குறிப்பாக போபாலில் உள்ள சுதிர் சர்மாவின் வீட்டை வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் அவருடைய ஐபோன்4-யிலிருந்து பல எஸ்.எம்.எஸ்-கள் பெறப்பட்டுள்ளன.

"5 கிலோ சரக்கு உங்களுக்கு வந்திருச்சா?'

" ஆமா, இன்றைக்கு 17.5 கிலோ சரக்கு வந்திடுச்சு. நன்றிகள் பய்யா "

"லட்சுமிகாந்த்ஜிக்கு 5 கிலோவைக் கொடுத்துவிடுங்கள். நாளைக்கு நான் அனுப்புகிறேன் "

இந்த குறுந்தகவல்களில் பேசப்பட்டுள்ள "கிலோ" என்பது "பல லட்சம் ரூபாய்கள்" என வருமானவரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். ஜூலை 2014-லிருந்து சிறையிலிருக்கும் சுதிர் சர்மா மட்டுமல்ல, அவரது ஆசான் லட்சுமிகாந்தும் பெருமளவிலான துட்டுக்களை பெற்றிருக்கின்றார். சாகர கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றன சஞ்சீவ் அகர்வால் என்ற கல்வித் தந்தையும் பெருமளவிலான தொகையை வழங்கி வந்திருக்கின்றார் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. திருபா கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்ற சுனில் தாதிர் என அறியப்பட்ட சுனில் தந்திரும் பெருமளவிலான தொகையை வழங்கி வந்திருக்கின்றார். இந்த கலக்சன் தொகையை எல்லாம் உடனடியாக லட்சுமிகாந்தின் தனிப்பட்ட உதவியாளரான மோகர் சிங் என்பவருக்குக் கைமாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 10, 2012-யில் அகர்வால் 15 லட்சம் ரூபாய்களை சுதிருக்கு வழங்கியிருக்கின்றார், அந்தத் தொகையை அதே நாளில் சுதிர் மோகர் சுங்கிற்கு கொடுத்திருக்கின்றார். அதே போல, இரண்டு மாதங்கள் கழித்து மார்ச் 7 அன்று, அதே அளவிலான ஒரு தொகையை சுங்கிற்கு வழங்கியிருக்கின்றார்.


பெருங்கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நபர் ஏன் சுதிர் சர்மாவிற்கு பெருமளவிலான பணத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுகின்றதல்லவா? இதனால் யார் உண்மையில் லாபமடைகின்றார்? இதைப் பற்றி வருமான வரித்துறையினர் வாயைத் திறக்கவேயில்லை என்பதும், கடந்த 2012-க்கு பின் இந்த வழக்கின் மீதான விசாரணை கொஞ்சம் கூட நகரவேயில்லை என்பது மட்டும் நிச்சயமாக புரிகின்றது..

ஆனால், சுதிர் சர்மாவால் "செலவிடப்பட்டுள்ள" 5.57 கோடி ரூபாய்களில் பெருமளவிலானவைகள், "சட்டவிரோதமான செயல்பாடுகளுக்காக செலுத்தப்பட்ட பணமாக" இருக்கும் என, வருமானவரித் துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

ஆனால் போபால், புது தில்லி போன்ற நகரங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் நம்ப தகுந்த ஆவணங்களின் பிரதிகளில் உமா பாரதியின் பெயர் தான் அடிபடுகின்றது. வியாபம் முறைகேட்டில் சிலருக்கு ரொக்கமெண்டேசன் கொடுத்தார் என அவருடைய பெயர் 17 இடங்களில் காணப்படுகின்றது. ஆனால், கல்விநிறுவனங்களில் இடம்பெறவா, வேலைவாய்ப்புகளில் நுழைவதற்கா எதற்காகப் பரிந்துரைகளை மேற்கொண்டார் என சரிவரத் தெரியவில்லை. ஆனால், அந்த ஆவணங்களில் உமா பாரதி யாரை எல்லாம் பரிந்துரைத்தாரோ அவர்களுடைய பெயர் விவரங்களும், வரிசை எண்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறப்பு விசாரணைக் குழுவினர் மனது வைத்தால் வெகு சுலபத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து உண்மையைக் கண்டறிய முடியும்.

வியாபம் தேர்வுகளின் கணினி முறைமை பகுப்பாளரான நிதின் மகேந்திராவின் வன்தட்டுகளைச் சிறப்பு விசாரணைக் குழுவினர் சோதனை செய்த போது, அதிலிருந்த பல முக்கியமான தகவல்கள் அழிக்கப்பட்டிருந்ததை அவர்கள் அறிந்து கொண்டார். அதனை காந்திநகரில் அமைந்திருக்கும் அரசாங்க தடயவியல் ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பு பரிசோதனை செய்த போது, அழிக்கப்பட்ட தகவல்களில் உமா பாரதியின் பெயர் இடம்பெற்றிருந்ததாகவே சொல்லப்படுகின்றது. அவர் முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்திடமும், அவருடைய உதவியாளரான சுக்லாவிடும் பல தேர்வர்களின் பெயரைப் பரிந்துரை செய்திருக்கின்றார். தற்சமயம் லட்சுமிகாந்தும், சுக்லாவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமா பாரதியிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பிய போதும், எல்லாவற்றையும் ஒரே பத்தியில் மறுத்து பதில் அனுப்பினார் அவர். காவல்துறை தலைமை இணை இயக்குநர் நந்தன் தூபே விடாப்பிடியாக போபாலிலுள்ள அவரது வீடுவரை சென்று விசாரணைகளை மேற்கொண்ட போதும், பின்னர் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்களில் தானோ ஓர் அப்பாவி என்றே கூறியிருக்கின்றார் உமா பாரதி.


வியாபம் முறைகேட்டின் கறைபடிந்த பக்கங்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து அரசிதழ் பதிப்பெறாத மாநில அரசுப் பணிகளுக்காக ஏறத்தாழ 81 நுழைவுத் தேர்வுகளை வியாபம் நடத்தியிருக்கின்றது. இத் தேர்வுகளின் மூலம் ஏறத்தாழ 1 கோடி விண்ணப்பத்தாரர்களிலிருந்து 4 லட்சம் பேரை தேர்வு செய்து பணிநியமனம் வழங்கியிருக்கின்றது மத்திய பிரதேச அரசாங்கம். தேர்வுகளை நடத்த வியாபம் நிறுவனம் வசூலித்த கட்டணங்கள் மூலமாகக் கடந்த ஆறு ஆண்டுகளில் 124 கோடி ரூபாய்களையும் வசூலித்திருக்கின்றது. கடந்த 2012-யில் நுழைவுக் கட்டணங்களை உயர்த்தியதால் கூடுதலாக 83 கோடி ரூபாயை அந் நிறுவனம் பெற்றது. ஆனால், அந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் முன்கூடியே நிர்ணயிக்கப்பட்டதோடு, கல்லூரிகளின் சீட்டுக்களும், பணி நியமனங்களும் லஞ்சம் கொடுத்தோருக்குத் தான் இறுதிப் போய்ச் சேர்ந்தன. இரண்டாம் தகுதி நிலை அரசுப் பணிகளுக்கு சுமார் 4 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய்கள் வரை லஞ்சம் கோரப்பட்டிருக்கின்றது. மூன்றாம், நான்காம் தகுதி நிலை அரசுப் பணிகளுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்கள் முதல் 50 ஆயிரம் ரூபாய்கள் வரை முறையே லஞ்சம் வாங்கப்பட்டுள்ளன, எனக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள். அதே போல, மருத்துவக் கல்லூரி சீட்டுக்கான விலை 10 முதல் 15 லட்சம் ரூபாய்களாகவும், கால்நடை மருத்துக் கல்விக்கான சீட்டுக்கள் 3 லட்சம் ரூபாய்களாகவும் இருந்திருக்கின்றது. மருத்துவ பட்டமேற்படிப்புக்கான சீட்டுக்கள் 75 லட்சம் ரூபாய்களுக்கு மேல் வாங்கப்பட்டுள்ளது.

முன்பு எல்லாம் அந்தந்த அரசுத் துறையே அரசுப் பணியிடங்களை நிரப்பி வந்தது. கான்ஸ்டபிள் நிலை காவலர்கள், காவல்துறை துணை ஆய்வாளர்களுக்கான பணி நியமனங்களைக் காவல்துறை தலைமை ஆய்வாளர் அலுவலகமும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமுமே வழங்கி வந்தது. அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியப் பணியிடங்களை ஊராட்சி மன்றங்கள் நியமித்து வந்தன. ஆனால், அண்மையக் காலங்களில் பெருகிவிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், தொழில்சார் கல்லூரிகளின் வரவால் இப்போது அனைத்து இடங்களையும் ஒன்றாக வைத்து நிரப்பப் போகின்றோம் என கொண்டுவரப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட பணிநிரப்பு முறையும், மாணவர் சேர்க்கை முறையுமே இவ்வாறான முறைகேடுகளுக்கு பாதைப் போட்டுக் கொடுத்திருக்கின்றது.

இதில் கொடுமை என்னவென்றால், "நல்லாட்சி" தருகின்றோம் எனக் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் தமது வசதிக்கேற்ப சட்ட திட்டங்களையும், அரசு விதிகளையும் வளைத்திருக்கின்றார்கள். முன்பு எல்லாம் எந்தவொரு வேலைக்கும் மத்திய பிரதேச வாழ்விடச் சான்றிதழ் தேவைப்படும், ஆனால் இப்போது அதை நீக்கிவிட்டனர். அதே போல சில பணிகளில் சேர சில தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன, அதாவது உயரம், எடை போன்ற உடல் தகுதிகளையும், ஓடுவது, வேகம் போன்ற ஆற்றல் தகுதிகளையும் இப்போது அவர்கள் நீக்கி விட்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் பணிகளுக்கு கோரப்பட்டு வந்த குறைந்தளவு உயரம் போன்றவையும் கைவிடப்பட்டுள்ளது.

கல்விச் சேர்க்கை, பணி நியமனங்களில் எவ்வித ஒழுங்கையும், விதிகளையும், கட்டுப்பாடுகளையும் வகுக்காமல் ஒன்றிணைக்கப்பட்ட விண்ணப்ப முறைக்கு மாறியதே பெருந் தவறு என்கிறார் ஓய்வுபெற்ற IAS அதிகாரி சத்திய பிரகாஷ் அவர்கள். இது ஒன்று சரியாக திட்டமிடப்டாமல் நிகழ்ந்ததாக இருக்க வேண்டும், இல்லையென்றால் வேண்டுமென்றே இவ்வாறு திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளதாக இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விடயம், குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் சத்திய பிரகாசையும் மிரட்டியிருக்கின்றார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைப் பற்றி எதாவது வெளியே வாயைத் திறந்தால் விளைவுகள் படு மோசமாக இருக்கும் எனவும், சம்பந்தமேயில்லாத 40 வழக்குகளை அவர் மீது போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

"பெரும்புள்ளி" ஒருவரையும், மாநிலத்தின் முதல் குடிமகனையும், அவரது மனைவியையும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் காப்பாற்றும் நோக்கத்தோடு தான் இதுவரை விசாரணைகள் போய்க் கொண்டிருக்கின்றன என்றார். இல்லையென்றால் ஏன் சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த சில அதிகாரிகளே தமது உயிருக்கு ஆபத்து எனக் கூறி காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனுக் கொடுக்கணும் சொல்லுங்கள்? விசாரணைகள் அனைத்துமே ஏனோ தானோ என்று தான் நடைபெறுகின்றன. சிபிஐ விசாரணை வந்தால் கூட சம்பந்தப்பட்ட பெரிய கைகளை எல்லாம் தொடக் கூட முடியாது என தமது விபரங்களை வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் அவுட்லுக் இதழிற்கு தெரிவித்திருந்தார்.

வெளியாகிய ஆவணங்கள் எல்லாம் திரிக்கப்பட்டவை என பாஜக சாதிக்கின்றது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் திக்விஜய் சிங் வழங்கிய ஆவணங்கள் போலியாக இருந்தால் அவர் மீது சிறப்பு விசாரணைக் குழு நடவடிக்கை எடுத்திருக்குமே, அப்படி ஒன்றும் இதுவரை நடைபெறவில்லை. அது மட்டுமில்லை, மறு பக்கத்தில் வியாபம் அலுவலகங்களிலிருந்த கணினிகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் சரிவரப் பாதுகாக்கப்படவில்லை என பிராசாந்த் பாண்டே கூறுகின்றார். மொத்தத்தில், சிபிஐ விசாரணை நடத்தினால் கூட ஏறக்குறையக் கலைக்கப்பட்டுவிட்ட சாட்சியங்களை வைத்துக் கொண்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்கும் என்பதே பெரும் சந்தேகம் தான்.

Original Article: VYAPAM & Stew To Die For. The scam is no longer a state subject, it has become a Sangh family affair எழுதியது போபாலிலிருந்து கே.எஸ்.ஷைனி மற்றும் தில்லியிலிருந்து உத்தம் செங்குப்தா உடன் புது தில்லியிலிருந்து மீத்து ஜெயின், தமிழில் மொழியாக்கம் செய்தது விண்ணன்.

0 comments:

Post a Comment