இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தமிழகம் கடந்து புதிய பரிமாணம்.

சென்ற சுதந்திர தினத்த்தன்று இந்தியாவில் மொழிகளுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி சமூக ஊடகமான ட்விட்டரில் சிலர் ஒன்று கூடி ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நிகழ்த்தனர். #StopHindiImposition என்ற ஆச்சடுக்கு மூலமாக அன்றைய தினத்தில் ட்விட்டர் பக்கத்தின் முகப்பில் வருமளவில் பலரும் ஒன்றுகூடி குரல் எழுப்பியது நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த பலரும் இந்தியாவின் ஆட்சி மொழி சட்டத்தைத் திருத்தி தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மராத்தி உட்பட பல மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்குமாறு அறைக்கூவல் விடுத்திருந்தனர்.

இந்தியாவில் இந்தி மொழியை அடுத்து வங்காளம், தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழி பேசுவோரே அதிகம் இருக்கின்றனர் என கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்த மொழிகள் பேசுவோர் மட்டுமே இந்தியாவில் 30 % மக்களாகவும் இருக்கின்றனர். அதாவது, இந்த ஒவ்வொரு மொழி பேசுவோரது தொகையும் பல ஐரோப்பிய மொழிகளைப் பேசுவோரை விட மிக அதிகமாக இருக்கின்றனர். அது மட்டுமின்றி, இந்த மொழிகள் பேசப்படும் ஒவ்வொரு மாநிலமும் பல ஐரோப்பிய நாடுகளை விட நிலப்பரப்பில் பெரியதாகவும் இருக்கின்றது.

இந்த மொழிப் போராட்டத்தை பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்ற Promote Linguistic Equality முகநூல் குழுவைச் சேர்ந்தவர்களே ஏற்பாடு செய்திருந்தனர். இந்த முகநூல் குழுவில் தற்போது ஏறத்தாழ 8,000 பேர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்திய அரசாங்கம் இந்தி மொழியை மட்டும் சீராட்டி வளர்ப்பதாகவும், மற்ற மொழிகளின் உரிமைகளை புறக்கணிப்பதாகவும் இக் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த ட்விட்டர் போராட்டத்தின் குறிக்கோளே இந்திய மத்திய அரசாங்கம் மொழி சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும், இந்தி மொழியல்லாத மாநிலங்கள் மீது இந்தி மொழித் திணிப்பை செய்யக் கூடாது என்பதே என்கின்றனர் அவர்கள்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது ஒன்றும் இந்திய வரலாற்றில் இது முதன்முறையல்ல. பல ஆண்டுகளாகவே இந்த மாதிரியான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுத் தான் வருகின்றன. 1937-யில், சென்னை மாகாணத்தை ஆட்சி செய்து வந்த இந்திய தேசியக் காங்கிரசின் அரசாங்கம், பள்ளிகளில் கட்டாய இந்தி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அமுலாக்கியது. இதனால் அப்போது சென்னை மாகாணத்தில் பொதுமக்களிடையே இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட 3 வருடங்கள் பல போராட்டங்களை பொது மக்கள் முன்னெடுத்தனர். இதன் விளைவாக, 1940-யில் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கின் துரை பள்ளிகளில் கட்டாய இந்திப் பாடத்தை நீக்கி ஆணையிட்டார். 

இந்திய விடுதலைக்குப் பின், 1949-யில் இந்திய சட்டசபைக் கூட்டத்தில் இந்தியாவிற்கான ஆட்சி மொழி குறித்து விவாதம் நடந்தது. அப்போது சென்னை மாகாண உறுப்பினராக இருந்த ராமலிங்கம் செட்டியார் அவர்கள், இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவித்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என எச்சரித்தார். அவர் உட்பட தென்னிந்தியாவைச் சேர்ந்த பல உறுப்பினர்களின் எதிர்ப்பினால் இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்கும் திட்டத்தை அப்போதைய ஆட்சி மன்றத்தினர் கைவிட்டனர். அதனால் இன்றுவரை இந்தியாவின் தேசிய மொழி என எதுவும் இல்லை. ஆனால், மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி நீடித்து வருகின்றது.

பின்னர் 1965-யில் மத்திய அரசாங்கம் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க விழைந்தனர். இதனால் சென்னை மாநிலத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாத்திரி இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆங்கிலமே நீடிக்கும் என வாக்குறுதி தந்தார். அப்போது ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் விளைவாக, சென்னை மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி முற்றுப் பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

மீண்டும் 1967-யில் இந்திய அரசாங்கம் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும், இந்தி பேசப்படாத மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கூட கட்டாயமாக இந்தியைக் கற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள். இது மீண்டுமொரு மக்கள் போராட்டத்தை உருவாக்கியது. குறிப்பாக தமிழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அப்போதிருந்த திமுக அரசாங்கம் மாநிலத்தில் தமிழ், ஆங்கிலம் என இருமொழி கொள்கையை அறிமுகம் செய்தது. மாநில அரசின் பொதுவிடங்கள், அரசாங்க நிருவாகம் நிலையங்கள், கல்வி நிலையங்கள் என எங்கும் தமிழ் மொழியிலேயே சேவைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்களின் விளைவாக புதியதோர் இந்தி திணிப்பு எதிர்ப்புக் குரல்கள் நாடு முழுவதும் ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தில் பணியாற்றுவோர் அனைவரும், அதாவது அமைச்சர்கள், அரசு திணைக்களங்கள், கூட்டுறவு நிலையங்கள், வங்கிகள் என அனைத்திடங்களில் பணியாற்றுவோரும் தமது சமூக ஊடகங்களை இந்தி மொழியில் மட்டுமே பயன்படுத்துங்கள் என சுற்றறிக்கை அனுப்பியது அரசு. இதனால் இந்திய மொழி பேசாத மாநிலங்களில் பணியாற்றுவோர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தமிழகம் உட்பட பல மாநிலங்களிலிருந்து எதிர்ப்பும் கிளம்பியது.

சென்னை உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் குடியேறுவோர் அம் மாநில மொழிகளை கற்க மறுக்கின்றனர் எனவும், மாறாக உள்ளூர் மக்களை இந்தி மொழி கற்க கட்டாயப்படுத்துகின்ற மனோபாவம் வடநாட்டினர் மத்தியில் காணப்படுவதாக இந்தி மொழியைத் திணிக்காதீர்கள் என சென்னையை மையமிட்டு இயங்கி வரும் முகநூல் பக்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

"இந்தி மொழி பேசுகின்றவர் அவரைச் சுற்றியுள்ளோர் இந்தி பேசவில்லை என்பதற்காக கொதிக்கின்றாரே, ஒருவேளை அவர் அமெரிக்காவிற்கு போனால் அங்கும் இந்தி பேசவில்லை என புலம்புவாரா? மாட்டார் தானே, அப்புறம் ஏன் இங்கு வந்த நம் மீது இந்தியைத் திணிக்கும் ஏகாதிபத்திய மனோபாவத்துடன் நடந்து கொள்கின்றார்? ஏனெனில் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் முதல் தர மொழி என்பதாக மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார். மற்ற மொழி பேசுவோரை இரண்டாந்தர மக்களாகவே கருதுகின்றார்" என முகநூலில் கணேஷ் வேலுசாமி என்பவர் கூறுகின்றார். 

பெங்களூர் மாநகரத்தில் தூய்மையான இந்தியா வேண்டும் என்ற அறிவிப்பு பலகையை இந்தியில் வைத்திருப்பதைக் கண்டு பெங்களூரைச் சேர்ந்த சந்தீப் காம்பி கேள்வி எழுப்புகின்றார்? பெங்களூரில் வசிக்கும் பல கன்னடமல்லாதவர்கள் கன்னட மொழியை அறியாமலேயே வாழ்ந்துவிடலாம் என நினைக்கின்றனர் என ஸ்ரீராம் விட்டலாமூர்த்தி குற்றம்சாட்டுகின்றார். 

சென்னையிலிருந்து கோவைக்கு செல்லும் ரயில்வே முன்பதிவில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே இருக்கின்றன? தமிழ் மொழிக்கு ஏன் இடமளிக்கப் படவில்லை என வசந்த் செட்டி கேள்வி எழுப்புகின்றார். 

"எனக்கு நினைவிருக்கின்றது ஒருமுறை திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தேன். அப்போது பாதுகாப்பு அறிவிப்புக்களையும், மற்ற முக்கிய அறிவிப்புக்களையும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தந்தனர். ஆனால், அந்த விமானத்தில் பயணித்த 90 % ஆன மக்கள் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளை மட்டுமே அறிந்தவர்கள். ஒரு பகுதியில் பேசப்படாத மொழியில் வெறும் சம்பிரதாயத்திற்காக பயன்படுத்துவது சரியா? ஆனால், நான் லண்டன் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வந்த சமயம், பிரிட்டீஸ் ஏர்வேசில் பணியாற்றும் பணிப் பெண்கள், " பிரிட்டீஸ் ஏர்வேஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறது என தமிழில் அறிவித்துவிட்டுத் தான் ஆங்கிலத்தில் அறிவித்தனர்" என வலைப்பதிவர் விக்னேஷ் ராஜ் தமது கவலையை பதிவு செய்கின்றார்.

"இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற போலிக் கருத்தை தொடர்ந்து வெகுமக்கள் ஊடகங்களும், மாற்று ஊடகங்களும் பல காலமாக பரப்பி வருகின்றனர். இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல என சுட்டிக் காட்டினால், நம்மை தேசத் துரோகிகளாகவும், இந்து மத விரோதிகளைப் போலவும் சித்தரிக்கின்றனர் இந்துத்வா சார்புடையவர்கள்" என கருநாடாகத்தைச் சேர்ந்த ஐஷிக் சாகா என்ற மாணவி கோரா வலைதளத்தில் எழுதியிருக்கின்றார்.

பெங்களூர், சென்னை என்று மட்டுமில்லை இன்று இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் இந்தி திணிப்பு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை.

குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினைப் அடுத்து நாட்டின் வடக்கிலிருந்து பலரும் தென்னிந்தியாவில் குடியேறி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் குடியேறிய இவர்கள் அங்குள்ள மொழிகளை கற்க மறுக்கின்றார்கள், மாறாக உள்ளூர் மக்களை இந்தி கற்குமாறும் கட்டாயப்படுத்துகின்றனர். 

இன்று கருநாடகம், மராத்தியம், மேற்கு வங்கம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் அதிகளவிலான இந்தி திணிப்புக்கள் அரங்கேறி வருகின்றன. அங்கு மட்டுமில்லை தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான அளவில் இந்தி மொழி திணிப்புக்கள் நிகழ்ந்து தான் வருகின்றன.

1976-ஆம் ஆண்டில் ஆட்சி மொழி தொடர்பிலான இந்திய சட்ட சாசன விதிகளில் எக் காரணம் கொண்டும் தமிழ் நாட்டில் இந்தி பயன்படுத்தப்படாது என உறுதி வழங்கப்பட்டுள்ள போதும், இன்று நடந்து கொண்டிருப்பதோ தலைக்கீழ் என்று தான் சொல்ல வேண்டும். அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வங்கிகள், ரயில்வே, அரசு அலுவலங்களில் கூட அனைத்து சேவைகளையும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே தருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக பல புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.

"ஒன்றாம் வகுப்பு முதலே குழந்தைகளுக்கு இந்தியைக் கற்பிக்கின்றனர். இந்தியை கற்க வேண்டிய எந்தவொரு தேவையுமில்லாத போதும், எதற்காக கழுத்தைப் பிடித்து இந்தியை அரசாங்கம் திணித்துக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை" என கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரீத்தி ஸ்ரீதரா கூறுகின்றார்.

"எல்லோரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொது மொழி ஒன்று தேவை என்றால், நிச்சயம் அது ஆங்கிலம் மட்டுமே. இன்று எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிகின்றதல்லவா. ஆனால், எனது நண்பர்கள் பலர் மீதும் அவர்கள் பணியாற்றும் அலுவலக கூட்டங்களை இந்தியில் மட்டுமே நடத்துவதால் அவர்கள் மீது இந்தி வேண்டுமென்றே திணிக்கப்படுகின்றது." என்கிறார் மேலும் அவர்.

"நவீன் இந்தியா உருவானதிலிருந்தே இந்திய அரசாங்கத்தின் மொழி கொள்கைகள் முழுவதுமே குறைபாடுகள் நிறைந்த ஒன்று. மத்திய அரசாங்கம் தொடர்ந்து இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. அதன் எண்ணம் எங்கும் எதிலும் இந்தி இருந்தாக வேண்டும் என்பதாகவே இருக்கின்றது " என கருநாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் வல்லீஷ் குமார் எழுதுகின்றார்.

கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் சுதர்சன நாச்சியப்பன் தமிழையும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக்கும் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். ஆனால் மத்திய மாநில அமைச்சர் ஹரிபாய் பரதிபாய் சௌத்திரி இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 343-351 இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே எனக் கூறியிருப்பதாகக் தெரிவித்து அந்த தீர்மானத்தை முற்றாக நிராகரித்தத் தள்ளினார்.

இந்தியாவில் நிலைமை இப்படியிருக்க, இந்திய மொழியான தமிழிற்கு இலங்கை மற்றும் சிங்கப்பூரில் முழு ஆட்சி மொழிகளில் ஒன்று என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லை, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் முறையே வங்காளம் மற்றும் நேபாளி ஆகிய மொழிகள் ஆட்சி மொழியாக திகழ்ந்து வருகின்றன. ஆனால் அந்த மொழிகள் பேசுவோர் பெருமளவில் வாழ்கின்ற இந்தியாவிலோ அந்த மொழிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. 

இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதை சிலர் இந்தி வெறுப்பு என்ற கோணத்தில் குழப்புகின்றனர். இந்தி திணிப்பு தான் பிரச்சனையோ தவிர, இந்தி மொழியால் எவ்வித பிரச்சனையுமில்லை என்கிறார் ஹர்ஷா. அவருடைய கருத்தை ஆமோதிக்கும் மிதுன், " ஆம், நான் ஒரு தமிழன், இந்தி மொழியை நேசிக்கின்றேன். ஆனால் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கின்றேன். தமிழகத்தில் தமிழ் மொழி மட்டுமே போதும், இந்தி வேண்டியதில்லை" என்கிறார்.

"மத்திய அரசின் மிகத் தீவிரமான இந்தி மொழி பரப்புரைகளும், கூடவே பாலிவுட் திரைப்படங்களின் தாக்கத்தாலும், சில வடநாட்டு மக்களிடையே இந்தியே இந்தியாவின் சிறப்பான மொழி என்ற போலியான கருத்துருவாக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்கிறார் மராத்தியரான சுதீந்திரா சஞ்சீவ்.

"அனைத்து இந்தியர்களுக்கும், அவர்களுடைய மொழிகளுக்கும் சம உரிமை வழங்கினால் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை இந்தியர்கள் கொண்டாட முடியும். இல்லையென்றால், இந்தி மொழியல்லாதோர்கள் அனைவரும் இரண்டாந்தர குடுமக்களாக மட்டுமே இருக்க முடியும். நாங்கள் கோருவது எல்லாம் அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தான்" என கருநாடகத்தைச் சேர்ந்த மாணவரும், #StopHindiImpostion கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்குசெய்திருந்தவர்களில் ஒருவரான பிரசன்னா என்பவர்.

பொதுவாக இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்றாலே தமிழகத்தில் மட்டுந்தான் நிகழும் என பொது ஊடகங்கள் எப்போதும் சொல்லி வந்ததுண்டு. ஆனால், இந்த முறை மொழிப் போராட்டமானது கருநாடகம், மராத்தியம், மேற்கு வங்கம் என நாடளாவிய வகையில் விரிவடைந்திருக்கின்றது. மொழிச் சமத்துவம் வேண்டும் என ட்விட்டர் போராட்டத்தில் பங்கேற்ற பலரும் தமிழகத்திற்கு வெளியே இருந்து குரல் கொடுத்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.

- விண்ணன்

Also published in English on Global Voices - No, India, Hindi Will Not Take Over Without a Fight.

0 comments:

Post a Comment